Sunday 28 July 2013

நெஞ்சு வலி ஏன் வருகிறது?

நமது உடலின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் Oxygen  எனப்படும் பிராண வாயுவும் குழுக்கோசு போன்ற சக்தியளிக்கும் பதார்த்தங்களும் அவசியம். அதாவது குழுக்கோசும் Oxygen -சனும் இணைந்து நடைபெறும் ஒரு செயற்பாட்டின் மூலம் உருவாகும் சக்தியே நமது உடலின் செயற்பாட்டுக்குத் தேவையான சக்தியை வழங்குகிறது.

உதாரணத்திற்கு நாம் நடக்கும் போது எமது கால்கள் அதிகம் வேலை செய்யும் , அப்போது கால்களுக்கு சக்தியளிக்க மற்றைய பகுதிகளைவிட கால்களுக்கு அதிகம் இரத்தம் செலுத்தப்படும். ஏனென்றால் இந்த இரத்தமே ஒட்சிசன் மற்றும் குளுக்கோசை தேவையான இடத்திற்கு கொண்டு சேர்க்கும் தொழிலை செய்கின்றன.

இவ்வாறு உடலின் குறிப்பிட்ட பகுதி அதிகம் வேலை செய்யும் போது அந்தப் பகுதிக்கு மேலதிகமாக தேவைப்படும் ஓட்சிசன் மற்றும் குளுக்கோசு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் வழங்கப்படும்.

இவ்வாறு உடலின் எல்லாப் பகுதிக்கும் இரத்தத்தை வழங்கும் உறுப்பு இதயமாகும். இதயம் துடிப்பதன் மூலமே உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் இரத்தம் கடத்தப் படுகிறது.

இதயாமனது தொடர்ந்து துடித்துக் கொண்டேதான் இருக்கும். அதாவது நமது இதயம் தொடர்ந்து வேலை செய்து கொண்டேதான் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து வேலை செய்வதற்காக இதயத்திற்கும் தொடர்ந்து சக்தி தேவைப் படுகிறது. மற்றைய பகுதிகளுக்கு ரத்தம் செல்வதைப் போல தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தின் தசைகளுக்கும் இரத்தம் குருதிக் குழாய்கள் மூலம் செலுத்தப்படுகிறது.

இவ்வாறு இதயத்திற்கு குருதியை எடுத்துச் செல்லும் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இதயத்தின் தசைகள் துடிப்பதற்குத் தேவையான சக்தியை உருவாக்குவதற்குரிய ஒட்சிசன் மற்றும் குளுக்கோசு கிடைக்காமல் போகின்ற போது வலி ஏற்படும் .அடைப்பு நிரந்தரமானது என்றால் இதயம் செயல் இழக்கும். இதுவே பொதுவாக இதய வலி நோய்கள் எனப்படுகின்றன(ischemic heart disease)

அடைப்பின் தன்மையைப் பொறுத்து இந்த நோயின் தீவிரம் பிரிக்கப்படுகிறது.

சில பேரில் இந்த அடைப்பு சிரிதலவானதாக இருக்கும். இப்படியானவர்களுக்கு ஓய்வாக இருக்கும் போது இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு போதியதாக இருப்பதால் ஓய்வாக இருக்கும் வேளையில் நோ (வலி) ஏற்படாது. ஆனாலும் இவர்கள் சற்று வேலை செய்யும் போது இதயம் அதிகம் துடிப்பதால் இதயத்திற்கு அதிக இரத்தம் தேவைப்படும் போது அடைப்பு காரணமாக அதிக இரத்தம் செல்ல முடியாமல் போவதால் வலி ஏற்படும் .அவ்வாறு வலி ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவர்கள் வேலையை நிறுத்தி சற்று ஓய்வெடுத்துக் கொண்டால் வலி மறைந்து விடும். இது நிலையான அன்ஜைனா(Stable angina) எனப்படும்.

அடுத்ததாக ஓய்வாக இருக்கும் போதே இதயம் துடிப்பதற்குத் தேவையான இரத்தம் வழங்க முடியாத அளவு அடைப்பு ஏற்படலாம். ஆனாலும் அந்த அடைப்பு ரத்தக் குழாயை முழுவதுமாக அடைத்துவிடாத படியால் இதய தசைகள் செயழ் இழப்பதில்லை( இறப்பதில்லை). ஆனாலும் இவர்கள் ஓய்வாக இருக்கும் போதே நெஞ்சு வலியை உணர்வார்கள்.இது நிலையற்ற அன்ஜைனா (unstable angina) எனப்படும்.

அடுத்ததாக இதயத்திற்கு இரத்த ஓட்டம் முற்றாக தடை படுவதால் ஏற்படுகின்ற மாரடைப்பு . இதயத்திற்கு பல குருதி குழாய்கள்(நாடி) இரத்தம் வழங்குகிறது.இந்த இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இரத்தக் குழாய் குருதி வழங்கும் இதயத்தின் பகுதி செயல் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.மாரடைப்பு மருத்துவத்திலே myocardial infarction எனப்படுகிறது myocardiam என்பது இதயத்தின் தசைகளையும் infarction எனபது செயல் இழப்பதையும்குறிக்கும்.

இனி குருதிக் குழாய்களில் எப்படி இந்த அடைப்பு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

குருதிக் குழாய்களின் உள்ளே கொழுப்புப் படிவுகள் மற்றும் பல பதார்த்தங்கள் மூலம் ஏற்படுகின்றது. இதிலே முக்கிய பங்கு வகிப்பது கொலஸ்ரோல் எனப்படும் கொழுப்பாகும். இந்தப் படிவுகள் (plaque) குருதிக் குழாயின்உள்ளே உள்ள போது இரத்த ஓட்டம் குறைந்து மேலே சொன்ன முதல் இரண்டு விதமான தீவிரமுடைய இதய வலி ஏற்படும்.சில பேரில் இந்த படிவுகள் வெடித்து அதைச் சுற்றி ரத்தம் உறைந்து அந்த இரத்தக் குழாயை அடைப்பதனால் மாரடைப்பு என்ற இறுதி நிலை ஏற்படும்.

No comments:

Post a Comment